மானங்காத்த மறவன்!

* "குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள்அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே."

(புறநானூறு: பாடல்: 74
பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)

பொருள் விளக்கம்
ஊன்தடி= சதைப்பிண்டம்,
ஆள்அன்று என்று வாளின் தப்பார்= ஆளல்ல என்று
கருதாமல் வாளால் வெட்டிடத் தவறமாட்டார்.
ஞமலி=நாய். கேளல் கேளிர்=பகைவர்.
மதுகை= மனவலிமை

மயிர் நீப்பின் வாழாத கவரிமான் போல்
மானம் வரின் உயிர்நீப்பர் எனும் குறளுக்கு;

தயிர் கடைந்தால் தலைகாட்டும் வெண்ணெய் போன்று
தமிழ்ச்சங்க காலத்து வீரன் வாழ்வே உண்மைச் சான்று.

தவழ்ந்து வரும் தன் மகவை
முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல்

தலைக்குமேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற
தன்மானத் தமிழ்ச்சிங்கம் அவன்!

தாமரை மொட்டிரண்டை ஏந்தி வரும்
தன் பட்டத்து ராணியையும்

நெளியாமல் நிமிர்ந்து நின்றே
நெஞ்சகத்தில் அணைத்துக் கொள்வான்.

நிலம் நோக்கும் வழக்கமின்றி
நேர்ப் பார்வை செலுத்தித்தான்

நிலவு முகத்தரசி
நெற்றியிலே இதழ் பதிப்பான்.

படுத்திருக்கும்போதும் பஞ்சணையில்
வினாக்குறிபோல் வளைய மாட்டான் - வில்லில்
தொடுத்திருக்கும் கணையைப் போல்
கால்நீட்டித் துயில் கொள்வான்!

"வளையாத முதுகெலும்பு பெற்றவனோ?
வணக்கம் எனும் பொருள்
விளையாத வயற்காடோ அவன் இதயம்?" என வியந்து,
வாய் பிளந்து மூக்கின்மேல் விரல் வைத்து - அவனை
வாழ்த்தியவர் பலருண்டு!

"இரும்பொறை" மரபில் வந்த இணையிலா வீரனவன்.
இரும்பொத்த கணையமரம் போல கால் படைத்த சேரனவன்; - அதனாலே
சேரமான் கணைக்கால் இரும்பொறை யென்னும்
செந்தமிழ்ப் பெயருடன் செங்கோல் ஏந்தினான்.

தொண்டித் துறைமுகம் அவன் ஆட்சித் தலைநகர் - அதனை
"டிண்டிஸ்" என்று யவனர்கள் அழைத்தனர்!

மூவன் என்னும் முடியுடை வேந்தனை வீழ்த்தி - அவன்
முகவாய் நொறுக்கிப் பற்களைப் பெயர்த்து - தனது

கோட்டை வாயிற் கதவின் பெரிய
பூட்டின் மீது பொருத்தி வைத்தான் என்று
"களவழி நாற்பது" பாடிய பொய்கையார் எனும்புலவர் - அவனது
களப்புகழ் பலபடக் கூறிக் களித்திடுவாரே!
தமிழரிடை ஒற்றுமை என்பது அத்திப்பூ - ஆடிப்பிறை - அதனாலே
தமக்கிடையே போர் தொடுத்து தமிழ் இனம் பிளவுபட்ட சேதி கூறும்
வரலாற்று ஏடுகளின் வரிகளாக ஆகிவிட்டார் - தமிழர்
வாளாற்றல் காட்டுதற்கு வரிந்து கட்டி இனத்துக்குள் இரண்டுபட்டார்!

செங்கணான் எனும் சோழன்,
செருமுனையில் சிறுத்தை போன்றான்!
எங்கணும் வெற்றி கண்டு
புகழ்வானில் பறக்க விட்டான் புலிக் கொடியை!

அது கேட்டுச் சேரமன்னன்
ஆர்த்தெழுந்தான்!
அணி தேர்ப்புரவி ஆட்பெரும்படை
அவன் ஆணை கேட்டுப் பின்தொடர,

"மங்குமோ எந்தன் வீரம்?
என் மாவலித் தோளின் முன்னே
தங்குமோ சோழன் பெற்ற வெற்றி"யென்று
கணைக்கால் இரும்பொறை கர்ச்சித்து
கங்குல் கிழித்தெழும் ஒளியாக எதிர்ப்பட்டான்!

முரசுகள் போலே மத்தகம் படைத்த
முரட்டு யானைகள் மோதிடவே
அரசுத் தேர்களின் அச்சாணி கழன்று
ஆயிரம் சுக்கல்கள் ஆயினவே!

குளத்து நீரில் செத்து மிதக்கும்
குறுங்கொண்டை மீன் போலே
குதிரைகள் குளம்படி
குருதிச் சேற்றில் அழுந்தி பதிந்தனவே!

கட்கம் ஏந்திய காலாட் படையினில்
காயம் ஒருசிலர் முதுகில் பட்டிடவே
வெட்கம் துரத்த - அவர்கள்
வீழ்ந்து மடிந்தனரே!

உறுதி முழக்கமும் குருதிப் புனலும்
இறுதிப் பயணமும் எங்கும் நிறைந்த களம்!
பொருதிடும் இருவரில் வெல்வது யாரென
அறுதியிட முடியாமல் அமைந்த களம்!

ஆளுக்கொரு மின்னலை எடுத்து
வாளுக்குப் பதிலாக வீசினரோ - எனச்

சோழன் சுழற்றும் வாள்பட்டுச்
சூரர் தலைகள் ஆயிரம் உருளும்!

சேரன் வீசும் வாளின் பயனாய்
செக்கர் வான்போல் சிவந்தது நிலமும்!

ஈட்டியின் பாய்ச்சல் கண்டு
இமை கொட்டியவன் கோழை எனும்

இலக்கணத்தை இருவருமே
இதயத்தில் பதித்தவர்தான் என்றாலும்

சேற்றில் சிக்கிய களிறெனவே - இறுதியில்
சேரமான் இரும்பொறை சிக்கிவிட்டான்!

ஆற்றல் முழுதும் காட்டி நின்றான்;
ஆயினும் சோழன் முன்னே அவன் தோற்று நின்றான்!

திருப்போர்ப் புறமெனும் சமர்க் களத்தில்
திண்தோள் சேரன் தோற்றவுடன் -

அடடா; அவனைச் சோழமன்னன்
குடவாயிற்கோட்டச் சிறைதனில் அடைத்தான்.

உறைவிட்டெழுந்த உடைவாள் பட்டு
உயிர்விட்டுப் போரில் புகழ் சேர்க்க முடியாமல்

சிறைப்பட்டு வாழும் நிலை வந்ததே என்று
சிந்தை அணு ஒவ்வொன்றும் நோக வாடினான் சேரன்

தாகமம் ஒருநாள் அவன் நாவை உலத்த - சிறைக்
காவல் வீரனை அருகே அழைத்து -

தண்ணீர் விரைவில் கொணர்க என்றான் - சற்றுத்
தாமதமாகக் குவளையில் தண்ணீர்

கொண்டு வந்து கொடுத்ததினாலே - நெருப்பை
மொண்டு தகித்தது சேரனின் நெஞ்சம்!

பண்டு வாழ்ந்த குலப் பெருமையெலாம்
துண்டுபட்டுப் போனதெனத் துவண்டுவிட்டான்!

ஏடொன்று எழுதிவைத்து
எதிர்காலத் தமிழகமே - அதனைப்
பாடென்று விட்டுச் சென்றான்!

"பிள்ளையொன்று இறந்து பிறப்பினும் - சதைப்
பிண்டமொன்று பிறந்து தொலைக்கினும்

மூப்பு கொண்டு மடிந்திடினும்
முடிவிலொரு நோய் கண்டு முடிந்திடினும்

போரில் கலந்து விழுப்புண்பெற்று - மானமிகு
வீரர் என மாண்டிடாத பழி துடைப்பதற்காக

வாள் கொண்டு உடலில் கீறி -
வான்புகழ்; வாழ்வில் சேர்த்தபின்பே

உடலடக்கம் செய்திடும் மானமரபே
அடலேறுகள் மலிந்திடும் தமிழர் மரபு!

அந்தப்

பண்பாட்டு மரபு வழி வந்துதித்த நானோ - மனப்
புண்பட்டு பகையரசின் சிறைப்பட்டு நாய்போல

தண்ணீர்க்கும் காத்திருக்கலானேன் - இனி
உண்ணீர் என்று பன்னீர் தந்து உபசரித்தபோதும்

தகுதியன்று இனி உயிர்வாழ்தல் - அதனாலே
தமிழ்த்தாயே! என் மானங்காக்க

உன் மடிதனிலே விழுகின்றேன்;
தாங்கிக் கொள்க!"

இப்படி

ஏழடிப் புறப்பாடல் ஒன்றை எழுதிவிட்டு - சிங்க
ஏறுபோல் சேரமன்னன் பெயரைப் புகழில் நட்டான்!

எப்படிப்பட்டோர் இருந்தார் மறைந்தார் என்பது - அவரவர்
எச்சத்தாற் காணப்படும் என்பதற்கொப்ப

சேரமான் கணைக்கால் இரும்பொறை
வீரவாளினை ஓலையாய்க் கொண்டு

தீட்டிய புறப்பாடலை
நீட்டுகின்றேன் உம்மிடையே -

படித்துப்பாரீர்! - உணர்ச்சியால்
துடித்துப் போவீர்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:40 pm)
பார்வை : 88


பிரபல கவிஞர்கள்

மேலே