வண்ணநிலவே, வரவா?

கன்னிப் பெண்ணின் கவின்நெற் றியைப்போல்
முகிழ்த்து மேலும் முயன்று முயன்று
வளர்ந்தே அவள்முக வடிவம் அடைகிறாய்;
வண்ண நிலவே வா! வா! இயற்கை
அன்னையீன் றெடுத்த அருமை மக்களுள்
உன்னைப் பார்க்கையில் உவகை வளர்க்கிறேன்.
உன்னுடன் பிறந்தவன் உண்மையில் வஞ்சிக்
குட்டுவன் போலக் கோபக் காரன்!
இளங்கோ போல இருக்கிறாய் நீ தான் -
இப்படிச் சொல்வதை இதம்தெரி யாமல்
காலை வேலைக் கார னிடம்போய்ச்
சொல்லி விடாதே; சுடுவான் என்னை!

என்ன நிலவே, எதற்குச் சிரிக்கிறாய்?
திரைப்பட நடிகையைத் தெருவில் பார்த்ததும்
முந்தி யடித்து மொய்த்துக் கொள்ளும்
விசிறிகள் போல விண்மீன் கூட்டம்
உன்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து
கண்ணடிப் பதனைக் கண்டா சிரிக்கிறாய்?


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:29 pm)
பார்வை : 48


மேலே