முடியுமா?

தொலைவில் பூத்துத் தொங்கும் பரிதியைத்
தொட்டுப் பார்த்திட முடியுமா?
தும்பிவாய்ப் படாத தூயவிண் மலர்களைத்
தொடுத்துக் கட்டிட முடியுமா?
கலைவான் வில்லின் கவினைக் கையால்
கட்டிப் பிடித்திட முடியுமா?
கரும்பே! காதல் மலர்ந்தென்? உன்னைக்
கடிமணம் புரிந்திட முடியுமா?

ஊமை ஒருவன் உயிர்ப்பண் பாடிட
உலகில் என்றும் முடியுமா?
ஒருகால் கூட இல்லோன் இமயத்(து)
உச்சியில் ஏறிட முடியுமா?
சீமைப் பயணம் செய்திட ஏழைச்
சிறுவன் நினைத்தால் முடியுமா?
சிலையே! சிந்தை கலந்தென்? உன்னைச்
சேர்ந்திட என்னால் முடியுமா?


கவிஞர் : மீரா (கவிஞர்)(9-Mar-12, 6:36 pm)
பார்வை : 35


மேலே