உனக்கெது சொந்தம்!

குட்டிஆடு மாட்டிக்கிட்டா
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்!

தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்!

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமாட! (உனக்கு)

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா!
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா! - காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா (உனக்கு)

பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் - முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு? - நீ
துணிவிருந்தா கூறு!

ரொம்ப -
எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! - அவரு
எங்கே போனார் பாரு!

பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்த தெத்தனை எறந்த தெத்தனை
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு - இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:39 pm)
பார்வை : 271


மேலே