ஏழைகளின் புதுஉலகம் தெரியுதடா!

வெங்கிமலை உச்சியிலே! - புது
வெற்றி நின்று அழைக்குதடா! - புகழ்
மங்கிக் கிடந்தவர்க்கே! - அங்கே
வாழ்க்கை இருக்குதடா!

பொங்கி ஓடும் வெள்ளமெல்லாம்
பள்ளத்திலே வீழ்ந்து வீணாய்ப்
போகுதடா! உள்ளம் வேகுதடா!
புறப்படடா! உடனே புறப்படடா!

பொறுப்புடன் உழைத்துழைத்து
வெறுப்படைந் திருப்பவனே!
வரப்பெடுத்த வயலமைத்து
வானம் பார்த்து நிற்பவனே!
புறப்படடா! உடனே புறப்படடா!

கூட்டம்: புறப்படுவோம்! உடனே புறப்படுவோம்!

மற்றவன்: ஓட்டு வீட்டு முருகப்பா!
ஓலைக்குடிசை மருதப்பா!
மேட்டுக்கொல்லை வேலப்பா!
வேப்பந் தோப்பு மாரப்பா!
மாட்டைப் புடிச்சிக் கட்டிப் போட்டு
வாங்கப்பா - நம்ப
மாணிக்கண்ணன் காட்டும் வழியில்
போங்கப்பா!

கூட்டம்: புறப்படுவோம்! சேர்ந்து புறப்படுவோம்!

ஒருவன்: ஈரமில்லா பாறைகளை
நொறுக்கிடுவோம்! - அணையை
எழுப்பிடுவோம்!
மரங்கள் போட்டுத்
தடுத்திடுவோம்!
ஏழைகளின் திசையிலதைத்
திருப்பிடுவோம் - தண்ணியை
ஏரிகுளம் வயல்நிறையப்
பெருக்கிடுவோம்!

கூட்டம்: புறப்படுவோம்! ஒண்ணாப் புறப்படுவோம்

ஒருபெண்: கருப்பாயி செவப்பாயி
காடக்குப்பம் வெள்ளையம்மா
அடி - காளியம்மா பக்கிரியம்மா
ஓடி வாங்கடி சிக்கிரமா
கதையும் கட்சியும் பேச இப்போ
நேரமில்லே - பொதுக்
காரியத்தில் இறங்கும்போது
பேதமில்லே!

பெண்கள்: புறப்படுவோம்! நாமும் புறப்படுவோம்!

ஒருவன்: கொடுமையையும் வறுமையையும்
கூடையிலே வெட்டிவை!

பெண்: கொஞ்ச நஞ்ச பயமிருந்தால்
மூலையிலே கட்டிவை!

ஒருவன்: நெடுங்கவலை தீர்ந்ததென்று
நெஞ்சில் எழுதி ஒட்டிவை!

பெண்: நெரிஞ்சிக் காட்டை அழித்து - அதில்
நெல்லு விதையைக் கொட்டிவை!

ஒருவன்: ஏழைகளின் புது உலகம் தெரியுதடா! - நாம்
ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா!

கூட்டம்: கட்டிடுவோம் - அணையைக் கட்டிடுவோம்!


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:54 pm)
பார்வை : 142


பிரபல கவிஞர்கள்

மேலே