நிலவுக் கவிதை!

மணம் மயக்கும்
மல்லிகை பூக்கும் – ஒரு
மாலை நேரத்தில்
பேருந்தின்
ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன்
உன்னை நினைத்தபடி!

சிவக்க தொடங்கிய வானம்
தனக்கான கம்பள
விரிப்பென்ற
கர்வத்தோடு
மேகப் படியேறி
வான மேடைக்கு வந்தது நிலா
இரவு சொற்பொழிவாற்ற!


அதன் கர்வம் கண்டு
சிரித்திட்ட என்னிடம்
காரணம் கேட்ட நிலவிடம்
சொன்னேன் உன்னை பற்றி!

அலங்காரம் ஏதுமின்றி
அழகாய் இருந்தும்
அகங்காரம் ஏதுமற்ற
பேரழகு பெண்ணே
உன்னை பற்றி ஓர் ரகசியம்!

உனக்கே தெரியாத ஓர் ரகசியம்!!

உன் வீட்டருகே பூத்திருக்கும்
சிவப்பு ரோஜா – உண்மையில்
விடிந்தவுடன் உன்னை காண
விடிய விடிய விழித்ததனால்
கண் சிவந்துவிட்ட ஓர்
வெள்ளை ரோஜா என்ற ரகசியம்!!

அவ்வளவுதான்,
உன்னை பற்றி
இன்னும் சொல், இன்னும் சொல்
என்றபடி

என்
பேருந்தின் கூடவே
ஓடி வந்தது நிலா,

முன்பொருமுறை
உன் உள்ளங்கையில் நீ
வைத்திருந்த
மருதாணி போல்
செக்க செவேலென்று
சிவக்கத்தொடங்கிய
சூரியன் வானில் தோன்றும் வரை!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:47 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே