ஊஞ்சல்!!

மழை ஓய்ந்த - ஓர்
மார்கழி மாதத்து மாலை நேரம்

மழை பாட்டை பாடியபடி,

சுற்றி அமர்ந்து
பனிக்காற்று
குளிர் காயும்

தெரு விளக்கின் கீழ்
நடந்து கொண்டிருந்தோம்!

என் மெளனத்தை
வேகமாய் மொழி பெயர்த்துக்
கொண்டிருந்தது
உன் மனது
லேசாய் குளிரில் நடுங்கியபடி..,

'ரொம்ப குளிருதுல்ல..' என்றாய்,
இரண்டு கைகளையும்
குறுக்கியபடி.

சட்டென்று கூக்குரல்
ஒன்று கேட்டது..

அது வேறொன்றுமில்லை
இவ்வளவு நேரமாய்
கைகளை வீசி
நடந்து கொண்டிருந்ததால்
உன் கையின் நிழலை
ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்த
என் கைநிழலின் குரல்தான் அது
என்று தெரிந்ததும்

அதை சமாதானப்படுத்த
நீ அதன் மடியில்
அமரவைத்தாய்
உன் கையின் நிழலை!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:50 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே