பக்தி

பக்தியி னாலே -- தெய்வ -- பக்தியி னாலே.

சரணங்கள்

பக்தியி னாலே -- இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும், -- இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும், -- நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், -- நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும், (பக்தியி னாலே) 1

காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்; இத்
தாமசப் பேயைக் -- கண்டு
தாக்கி மடித்திட லாகும்; எந் நேரமும்
தீமையை எண்ணி -- அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகி யெறிந்துபொய்ந்
நாம மில்லாதே -- உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்,
(பக்தியி னாலே) 2

ஆசையைக் கொல்வோம், -- புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம்,-இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் -- உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி -- இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்,
(பக்தியி னாலே) 3

சோர்வுகள் போகும், -- பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும், நற்
பார்வைகள் தோன்றும், -- மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும், -- பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும், -- பிணி
தீரும், பலபல இன்பங்கள் சேர்ந்திடும்,
(பக்தியி னாலே) 4

கல்வி வளரும், -- பல
காரியங் கையுறும், வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும், -- நல்ல
ஆண்மை யுண்டாகும், அறிவு தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம் -- மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும், மெய்
வல்லமை தோன்றும், -- தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம், உண்மை
(பக்தியி னாலே) 5


சோம்ப லழியும், -- உடல்
சொன்ன படிக்கு நடக்கும், முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும், -- நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும், பொய்ப் பாம்பு மடியும், -- மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும்,
(பக்தியி னாலே) 6

சந்ததி வாழும், -- வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
‘இந்தப் புவிக்கே -- இங்கொர்
ஈசனுண் டாயின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்த மலர்த்தாள் -- துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும், என்
சிந்தை யறிந்தே -- அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும்,
(பக்தியி னாலே) 7


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 3:53 pm)
பார்வை : 0


மேலே