லக்ஷ்மி தேவி -- சரண் புகுதலா

மாதவன் சக்தியினைச் -- செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதுமிவ் வறுமையெலாம் -- எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை -- அன்னை
மாமக ளடியிணை சரண்புகுவோம். 1

கீழ்களின் அவமப்பும் -- தொழில்
கெட்டவரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப்போல் -- செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவும்
ஏழ்கட லோடியுமோர் -- பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கஇக் கொடு நோய்தான் -- வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ! 2

பாற்கட லிடைப் பிறந்தாள் -- அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ -- அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்
நாற்கரந் தானுடையாள் -- அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் -- செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3

நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தரிலும் -- பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தந் தோளினிலும் -- உடலில்
வெயர்த்திட வுழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் -- ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4

பொன்னிலும் மணிகளிலும் -- நறும்
விலும் பூசாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் -- செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் -- மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி -- அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம். 5

[பாட பேதம்]: 'வீழ்கவிக் கொடு' -- முதற்பதிப்பு
'வீழ்கவக் கொடு' -- கவிமணி

மண்ணினுட் கனிகளிலும் -- மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் -- உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் -- நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை -- எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6

வெற்றிகொள் படையினிலும் -- பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் -- நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை -- நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம் -- அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:00 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே