நவராத்திரிப் பாட்டு

மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே. 1

வாணி

வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. 2

ஸ்ரீ தேவி

பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீ தேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. 3

பார்வதி

மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:14 pm)
பார்வை : 0


மேலே