மேத்தா திலகருக்குச் சொல்வது

(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்.)

[சிதம்பர பதவியாகிய முக்தியிலே, நந்தனார் அடங்காத தாகம்
கொண்டிருந்தார். அது அவரை அடிமை கொண்டிருந்த ஆண்டைக்கு மனமில்லை. அவன் நந்தனாரைப்பலவித இம்சைகளுக்கு
உட்படுத்தினான்; அதுவுமின்றிச் சேரியிலிருந்த நிதானப்
பறையர்கள் பலர் ந்தனார்சிதம்பரத்தைப் பற்றி நினைக்கலாத தென்று போதனை செய்தார்கள். அந்த நிதானஸ்தர்களிலே ஒருவர் பாடிய பாட்டின் கருத்தையும வர்ண மெட்டையும் தழுவிப்
பின்வரும் பாடல் செய்யப்பட்டிருக்கிறது.]

“ஓய் நந்தனாரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ, நியாயந்
தானோ நீர் சொல்லும்” என்ற வர்ண மெட்டு.
பல்லவி

ஓய் திலகரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ, சொல்லும்.

கண்ணிகள

முன்னறி யாப்புது வழக்கம் -- நீர்.
மூட்டி விட்டதிந்தப் பழக்கம் -- இப்போது
எந்நகரிலுமிது முழக்கம் -- மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம். (ஓய் திலகரே) 1

சுதந்திரம் என்கிற பேச்சு -- எங்கள்
தொழும்புக ளெல்லாம்வீணாய்ப் போச்சு -- இது
மதம்பிடித் ததுபோ லாச்சு -- எங்கள்
மனிதர்க் கெல்லாம்வந்த தேச்சு. (ஓய் திலகரே) 2

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் -- அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் -- சிறு
பிள்ளைகளுக் கேஉப தேசம் -- நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம். (ஓய் திலகரே)


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 4:48 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே