பூபேந்திர விஜயம்

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
விண்ணவர்த முலகை யாள்ப்ர
தாபேந் திரன்கோப முறினுமதற்கு
அஞ்சியறந் தவிர்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட் டிற்
கடிமை பூண்டு வாழ்வோன்.
1

வீழ்த்தல்பெறத் தருமமெலாம், மறமனைத்துங்
கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
பாதமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன வீரமுடன் யுகாந்தரத்தின்
நிலையினிது காட்டி நின்றான்.
2

மண்ணாளு மன்னரவன் றனைச்சிறைசெய்
திட்டாலும் மாந்த ரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழோதி
வாழ்த்திமனங் களிக்கின்றாரால்
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
சிலருலகில் இருப்ப ரன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
இருளினது விரும்பல் போன்றே.
3

இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட் டிற்
கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
ஓருயிரென் றுணர்ந்த ஞானி
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
பெருமையெதும் அறிகி லாதார்,
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா தெனப்
பெரியோர் மொழிந்தா ரன்றே?


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:06 pm)
பார்வை : 0


மேலே