சக்தி

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.
சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்.
சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது;
அசையாமையில் அசைவு காட்டுவது.
சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது,
பிணைப்பது, கலப்பது, உதறுவது,
புடைப்பது, வீசுவது, சுழற்றுவது,
கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது,
ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது,
ஒன்றாக்குவது, பலவாக்குவது.
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
குதுகுதுப்புத் தருவது,
குதூஹலந் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது,
இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது,
சோர்வு தருவது, ஊக்கந்தருவது, எழுச்சி தருவது,
கிளர்ச்சிதருவது, மலர்விப்பது, புளகஞ்செய்வது,
கொல்வது, உயிர்தருவது.
சக்தி மகிழ்ச்சி தருவது, சினந்தருவது,
வெறுப்புத் தருவது, உவப்புத் தருவது,
பகைமை தருவது, காதல் மூட்டுவது,
உறுதி தருவது, அச்சந் தருவது,
கொதிப்புத் தருவது, ஆற்றுவது.
சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது,
காண்பது.
சக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது, தீர்மானஞ்
செய்வது,
கனாக்காண்பது, கற்பனைபுரிவது, தேடுவது, சுழல்வது,
பற்றிநிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது,
சக்தி மயக்கந்தருவது, தெளிவுதருவது.
சக்தி உணர்வது.
பிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி.
கண்ணன் மனைவி, சிவன் மகள், பிரமன் தங்கை.
பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்.
சக்தி முதற்பொருள்.
பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு.
சக்திக்கடலிலே ஞாயிறு ஓர் நுரை;
சக்திவீணையிலே ஞாயிறு ஒருவீடு; ஒரு ஸ்வரஸ்தானம்.
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.
சக்தியின் கலைகளிலே ஒளி யொன்று.
சக்தி வாழ்க.
2


காக்கை கத்துகிறது.
ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர்
பாய்ச்சுகிறது.
அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.
அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது.
மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும்
போது, மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.
கோழி கூவுகின்றது.
எறும்பு ஊர்ந்து செல்கின்றது.
ஈ பறக்கின்றது.
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான்.
இவையனைத்தும் மஹாசக்தியின் தொழில்.
அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக.
நமக்குச் செய்கை, இயல்பாகுக.
ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை,
சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும்
செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை,
நமக்கு மஹாசக்தி அருள் செய்க.
கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்,
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் --
இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக.
அன்புநீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது,
சாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர்செய்து,
இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை
வேண்டுகிறோம்.
அதனை அவள் தருக.
3


இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன.
காட்டிலே காதலனை நாடிச்சென்ற ஒரு பெண் தனியே
கலங்கிப் புலம்பினாள்.
ஒளி வந்தது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.
பேயுண்டு, மந்திரமுண்டு.
பேயில்லை, மந்திரமுண்டு.
நோயுண்டு, மருந்துண்டு.
அயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும்.
அவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும்.
நாம் அச்சங் கொண்டோம். தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்.
நாம் துயர் கொண்டோம்; தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்;
குனிந்த தலையை நிமிர்த்தினாள்;
சோர்ந்த விழியில் ஒளிசேர்த்தாள்;
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்;
இருண்ட மதியிலே ஒளிகொடுத்தாள்.
மஹாசக்தி வாழ்க.
4


“மண்ணிலே வேலிபோடலாம்.
வானத்திலே வேலி போடலாமா?” என்றான்
ராமகிருஷ்ண முனி.
ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா?
உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா?
உயிரைக் கட்டு. உள்ளத்தைக் கட்டலாம்.
என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும்
நிற்கின்றாள்.
சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்.
தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும்
அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும்.
இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’
என்று பெயர்.
இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி
இதில் இருப்பாள்.
இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டு விடு வாள்.
இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்.
இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன.
இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன.
இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது.
இது எனக்குப் போதும்.
சென்றது கருதமாட்டேன், நாளைச் சேர்வது நினைக்க
மாட்டேன்.
இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள்.
அவள் நீடூழி வாழ்க.
அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன், வாய் ஓயாமல்
வாழ்த்துகின்றேன்.
5


“மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி
போடலாமா?” போடலாம்.
மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது?
மண்ணைக் கட்டினால் அதிலுள்ள
வானத்தைக் கட்டியதாகாதா?
உடலைக் கட்டு. உயிரைக் கட்டலாம்.
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு. சக்தியைக் கட்டலாம்.
அநந்தசக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை.
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று
காத்துக்கொண்டிருக்கிறாள்.
மனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழி
வெய்தாத படி காக்கலாம்;
அதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால், அந்த
வடிவத்திலே சக்தி நீடித்துநிற்கும்.
புதுப்பிக்கா விட்டால் அவ் வடிவம் மாறும்.
அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை, பழைய
தலையணை, -- அதிலுள்ள பஞ்சையெடுத்துப் புதிய
மெத்தையிலே போடு. மேலுறையை கந்தையென்று
வெளியே எறி. அந்த வடிவம் அழிந்துவிட்டது.
வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்;
அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்.
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை.
எங்கும், எதனிலும், எப்போதும், எல்லாவிதத் தொழில்களும்
காட்டுவது சக்தி.
வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக. சக்தி யைப் போற்றுதல்
நன்று, வடிவத்தைக் காக்குமாறு.
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை
இழந்துவிடுவர்.
6


பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.
“இனிய இசை சோகமுடையது” என்பது
கேட்டுள்ளோம்.
ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய
தாயினும் சோகரசந் தவிர்ந்தது.
இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பதுபோலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள்நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்
களை அடுக்கிக்கொண்டுபோவது போலிருக்கிறது.
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
“தானதந்தத் தானதந்தத் தா-தனத்
தானதந்தன தானதந்தன தா --
தந்தனத்தன தந்தனத்தன தா.”
அவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக
வாசித்துக்கொண்டுபோகிறான்.
இதற்குப் பொருளென்ன?
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள்
சொல்லலாயிற்று: --
“காளிக்குப் பூச்சூட்டினேன். அதைக்
கழுதையொன்று தின்ன வந்ததே."
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன்.
அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்னவந்தது.
பராசக்தியைச் சரணடைந்தேன்.
நோய் மறைந்துவிட்டது.
பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள்
அவள் வாழ்க.
7


பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.
குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை
புரியாது; உள்ளம் குழலிலே ஒட்டாது.
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஒட்டும்
குழல் பாடும்.
இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின்
தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே
இசையுண்டாக்குதல் -- சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன.
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும்
யார் சுருதிசேர்த்துவிட்டது? சக்தி.
“ஜரிகை வேணும்; ஜரிகை!” என்றொருவன் கத்திக்கொண்டு
போகிறான், அதே சுருதியில்.
ஆ! பொருள் கண்டுகொண்டேன்.
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்,
ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன்.
தோற்றம் பல. சக்தி ஒன்று.
அஃது வாழ்க.
8


பராசக்தியைப் பாடுகின்றோம்.
இவள் எப்படி உண்டாயினாள்? அதுதான் தெரியவில்லை.
இவள் தானேபிறந்த தாய்; ‘தான்’ என்ற பரம்பொருளினிடத்தே.
இவள் எதிலிருந்து தோன்றினாள்? ‘தான்’ என்ற பரம்
பொருளிலிருந்து எப்படித் தோன்றினாள்? தெரியாது.
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும்
தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்குத் தெரியாது.
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும்
தெரியும்.
வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன்
இன்பமெய்தல்.
உள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும் உடையதாக;
உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க. மஹா
சக்தியின் அருள்பெறுதலே வாழ்தல்.
நாம் வாழ்கின்றோம்.
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும்
வாழ்த்து கின்றோம்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:41 pm)
பார்வை : 0


மேலே