ஆரிய தரிசனம் - ஓர் கனவு

கனவென்ன கனவே -- என்றன்
கண்துயி லாது நனவினிலே யுற்ற (கன) (கன)

கானகங் கண்டேன் -- அடா
கானகங் கண்டேன் -- உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன) 1

[பாட பேதம்]: 'சிரித்திடுங் கோழியாய்'
'அடா' என்பதற்குப் பதிலாக 'அடர்' என்றும்
பாடபேதமுண்டு.

பொற்றிருக் குன்றம் -- அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும்.
(கன) 2


புத்த தரிசனம்

குன்றத்தின் மீதே -- அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதொர் ஆலநெடுமரங் கண்டேன். (கன) 3

பொன்மரத் தின்கீழ் -- அந்தப்
பொன்மரத் தின்கீழ் -- வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன்.
(கன) 4

புத்த பகவன் -- எங்கள்
புத்த பகவன் -- அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன) 5.

காந்தியைப் பார்த்தேன் -- அவன்
காந்தியைப் பார்த்தேன் -- உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன்

.(கன) 6.

ஈதுநல் விந்தை! -- என்னை!
ஈதுநல் விந்தை! -- புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன்.
(கன) 7

பாய்ந்ததங் கொளியே; -- பின்னும்
பாய்ந்ததங் கொளியே! -- அருள்
தோய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன) 8

கிருஷ்ணார்ஜீன தரிசனம்

குன்றத்தின் மீதே -- அந்தக்
குன்றத்தின் மீதே -- தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன்.
(கன) 9

தேரின்முன் பாகன் -- மணித்
தேரின்முன் பாகன் -- அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக்
(கன) 10


ஓமென்ற மொழியும் -- அவன்
ஓமென்ற மொழியும் -- நீலக்
காமன்றன் உருவுமவ் வீமன்றன் திறலும்
(கன) 11

அருள் பொங்கும் விழியும் -- தெய்வ
அருள் பொங்கும் விழியும் -- காணில்
இருள் பொங்கும் நெஞ்சினர் வெருள் பொங்குந் திகிரியும், (கன) 12

கண்ணனைக் கண்டேன் -- எங்கள்
கண்ணனைக் கண்டேன் -- மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன) 13

சேனைகள் தோன்றும் -- வெள்ளச்
சேனைகள் தோன்றும் -- பரி
யானையுந் தேரும் அளவில தோன்றும். (கன) 14

கண்ணன் நற் றேரில் -- நீலக்
கண்ணன் நற் றேரில் -- மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)
15

விசையன்கொ லிவனே! -- விறல்
விசையன்கொ லிவனே! -- நனி
இசையுநன் கிசையுமிங் கிவனுக்கின் நாமம்.
(விசை) 16

வீரிய வடிவம்! -- என்ன
வீரிய வடிவம்! -- இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை!
(விசை) 17

பெற்றதென் பேறே -- செவி
பெற்றதென் பேறே -- அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன்.
(கன) 18

?வெற்றியை வேண்டேன்; -- ஐய,
வெற்றியை வேண்டேன்; -- உயிரை
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன்.
(பெற்ற) 19

சுற்றங் கொல்வேனோ? -- என்றன்
சுற்றங் கொல்வேனோ? -- கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ??
(பெற்ற) 20

மிஞ்சிய அருளால் -- மித
மிஞ்சிய அருளால் -- அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான்.
(கன) 21

இம்மொழி கேட்டான் -- கண்ணன்
இம்மொழி கேட்டான் -- ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான்.
(கன) 22

வில்லினை யெடடா -- கையில்
வில்லினை யெடடா -- அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா.
(வில்லினை) 23

வாடி நில்லாதே; -- மனம்
வாடி நில்லாதே; -- வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே.

(வில்லினை) 24

ஒன்றுள துண்மை -- என்றும்
ஒன்றுள துண்மை -- அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது.
(வில்லினை) 25

துன்பமு மில்லை -- கொடுந்
துன்பமு மில்லை -- அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை.
(வில்லினை)
26

படைகளுந் தீண்டா -- அதைப்
படைகளுந் தீண்டா -- அனல்
சுடவு மொண்ணாது புனல்நனை யாது.



(வில்லினை)
27

செய்தலுன் கடனே -- அறஞ்
செய்தலுன் கடனே -- அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே.




(வில்லினை)


28


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:25 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே