தோத்திரப் பாடல்கள் அக்னி தோமம் -- (தீ)

ரிஷிகள்:


எங்கள் வேள்விக் கூட மீதில்
ஏறுதே தீ! தீ! -- இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ! தீ! -- இந்நேரம். 1

அசுரர்:

தோழரே, நம் ஆவி வேவச்
சூழுதே தீ! தீ! -- ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேவ
வந்ததே தீ! தீ! -- அம்மாவோ! 2

ரிஷி:

பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே -- இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே -- இந்நேரம். 3

அசு:

இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே -- ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ! -- அம்மாவோ!
4

ரிஷி:

வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ! தீ! -- இந்நேரம்
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே -- இந்நேரம். 5

அசு:

கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே -- ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந்தோமே -- அம்மாவோ! 6

ரிஷி:

காட்டில் மேயுங் காளை போன்றான்
காணுவீர் தீ! தீ! -- இந்நேரம்
ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டு கின்றானே -- இந்நேரம். 7

அசு:

வலியி லாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே -- ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே -- அம்மாவோ!
8

ரிஷி:


வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந்தானே -- இந்நேரம்
மலியு நெய்யுந் தேனு முண்டு
மகிழ வந்தானே -- இந்நேரம். 9

அசு:


உயிரை விட்டும் உணர்வை விட்டும்
ஓடி வந்தோமே -- ஐயோ! நாம்
துயிலு டம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே -- அம்மாவோ! 10

ரிஷி:

அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த்தெழுந்தானே -- இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே --இந்நேரம். 11

அசு:


வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை யுண்பாரோ! -- ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமோ! -- அம்மாவோ! 12

ரிஷி:


அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே -- இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே -- இந்நேரம். 13

அசு:

பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே -- ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ! -- அம்மாவோ!
14

ரிஷி:

இளையும் வந்தாள் கவிதை வந்தாள்
இரவி வந்தானே -- இந்நேரம்
விளையு மெங்கள் தீயினாலே
மேன்மை யுற்றோமே -- இந்நேரம். 15

ரிஷி:


அன்ன முண்பீர் பாலும் நெய்யும்
அமுது முண்பீரே -- இந்நேரம்
மின்னி நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே -- இந்நேரம். 16

ரிஷி:


சோம முண்டு தேவர் நல்கும்
ஜோதி பெற்றோமே -- இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
சேர்ந்து விட்டோமே -- இந்நேரம். 17

ரிஷி:

உடலுயிர்மே லுணர்விலுந் தீ
ஓங்கி விட்டானே -- இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்
கைகொடுத்தாரே -- இந்நேரம்.
18

ரிஷி:

எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணும் தீ! தீ! -- இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே -- இந்நேரம்.
19


ரிஷி:



வாழ்க தேவர்; வாழ்க வேள்வி
மாந்தர் வாழ்வாரே -- இந்நேரம்
வாழ்க வையம், வாழ்க வேதம்,
வாழ்க தீ! தீ! தீ! -- இந்நேரம்.
20


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:50 am)
பார்வை : 0


மேலே