தோத்திரப் பாடல்கள் காளி ஸ்தோத்திரம்

யாது மாகி நின்றாய் -- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் -- நின்றன்
செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் -- வாழும்
பொய்ம்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதி சக்தி, தாயே-என் மீது
அருள்புரிந்து காப்பாய். 1

[பாட பேதம்]: 1.‘பொறிகளைக் கடந்தாய்’
2. ‘பொறியை மிஞ்சி’
3. ‘துயரழித்து’.
-- கவிமணி

எந்த நாளும் நின்மேல் -- தாயே,
இசைகள் பாடி வாழ்வேன்
கந்தனைப் பயந்தாய், -- தாயே,
கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில் -- வானில்
மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும் -- அங்குன்
செம்மை தோன்றும் அன்றே! 2

கர்ம யோக மொன்றே -- உலகில்
காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும் -- இங்கே
தவற லென்ப தின்றி
மர்ம மான பொருளாம் -- நின்றன்
மலர டிக்கண் நெஞ்சம்
செம்மை யுற்று நாளும் -- சேர்ந்தே
தேசு கூட வேண்டும். 3

என்ற னுள்ள வெளியில் -- ஞானத்
திரவி யேற வேண்டும்.
குன்ற மொத்த தோளும்-மேருக்
கோல மொத்த வடிவம்
நன்றை நாடு மனமும்-நீயெந்
நாளு மீதல் வேண்டும்
ஒன்றை விட்டு மற்றோர் -- துயரில்
உழலும் நெஞ்சம் வேண்டா. 4

வான கத்தி னொளியைக் -- கண்டே
மனம கிழ்ச்சி பொங்கி
யானெ தற்கும் அஞ்சேன் -- ஆகி
எந்த நாளும் வாழ்வேன்
ஞான மொத்த தம்மா -- உவமை
நானு ரைக்கொ ணாதாம்
வான கத்தி னொளியின் -- அழகை
வாழ்த்து மாறி யாதோ? 5

ஞாயி றென்ற கோளம்-தருமோர்
நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை -- எவரே
தேடி யோத வல்லார்?
வாயினிக்கும் அம்மா -- அழகாமாக
மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் -- ஆங்கே
நெஞ் சிளக்க மெய்தும்.
6

காளி மீது நெஞ்சம் -- என்றும்
கலந்து நிற்க வேண்டும்
வேளை யொத்த விறலும் -- பாரில்
வேந்த ரேத்து புகழும்
யாளி யொத்த வலியும் -- என்றும்,
இன்பம் நிற்கும் மனமும்
வாழி யீதல் வேண்டும் -- அன்னாய்!
வாழ்க நின்றன் அருளே. 7


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:00 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே