தோத்திரப் பாடல்கள் கோமதி மஹிமை

தாருக வனத்திலே -- சிவன்
சரணநன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார் -- பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்
பேருயர் முனிவர் முன்னே -- கல்விப்
பெருங்கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞானத்தினால்-உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான்: 1

“வாழிய, முனிவர்களே, -- புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
ஊழியைச் சமைத்த பிரான், -- இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்,
ஏழிரு புவனத்திலும் -- என்றும்
இயல்பெறும் உயிர்களுக் குயிராவான்,
ஆழுநல் லறிவாவான், -- ஒளி
யறிவினைக் கடந்தமெய்ப் பொருளாவான். 2

தேவர்க் கெலாந்தேவன், -- உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும் -- அந்தக்
கண்ணனுந் தானுமிங் கோருருவாய்
ஆவலொ டருந்தவங்கள் -- பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள் புரிந்தான், -- அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்;
3

கேளீர் முனிவர்களே -- இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே,
வேள்விகள் கோடி செய்தால் -- சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்
மூளுநற் புண்ணியந்தான் -- வந்து
மொய்த்திடும்; சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள் -- பல
நணுகிடும்; சரதமெய் வாழ்வுண்டாம்.
4


இக்கதை உரைத்திடுவேன், -- உளம்
இன்புறக் கேட்பீர், முனிவர்களே!
நக்க பிரானருளால் -- இங்கு
நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் -- வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்?
5

நக்க பிரானறிவான்; -- மற்று
நானறி யேன், பிற நர றியார்;
தொக்க பேரண்டங்கள் -- கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்; -- ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கட லதனுக்கே -- எங்குமா
அக்கரை இக்கரை யொன்றில்லையாம்.
6

இக்கட லதனகத்தே -- அங்கங்
கிடையிடை தோன்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்; -- திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடும்;
மிக்கதொர் வியப்புடைத்தாம் -- இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்;
மெய்க்கலை முனிவர்களே! -- இதகன்
மெய்ப்பொருள் பரசிவன் சக்தி, -- கண்டீர். 7

எல்லையுண்டோ இலையோ -- இங்கு
யாவர் கண்டார்திசை வெளியினுக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால் -- அதை
.................................
(இது முற்றுப்பெற வில்லை)
8


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:07 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே