தோத்திரப் பாடல்கள் கேட்பன

நல்லதோர் வீணைசெய்தே -- அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி! -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! -- நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1


விசையுறு பந்தினைப்போல் -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் -- சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; -- இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:14 am)
பார்வை : 0


மேலே