தமிழ் வீரரின் எழுச்சி

லல்லல லல்லல லால-ல
லல்லல லல்லல லால-லால
(என்ற வாய்ப்பாட்டு)

எங்கள் இளந்தமிழர் வீரர்-அவர்
இப்புவி வீழினும் வீரர் ! வீரர்!
சிங்கப் படையினைப் போலப்-பகைத்
தீயை எதிர்த்திடும் வீரர் ஆவர்!
கங்கை தவழ்ந்திடு நாடு-தங்கள்
காதல் எலாமந்த நாட்டினோடு
தங்க ளினத்தவர்க்காக-உயிர்
தன்னையு மீந்திடும் வீரர் ஆவர்!
(எங்கள் இளந்தமிழர் வீரர்)

வெற்றி நிலைத்திட வேண்டும்- தங்கள்
வீர மெலாம்புவி ஏறவேண்டும்
சுற்றம் சுகப்பட வேண்டும-நற்
சுதந்திரம் வாழ்வினில் கூடவேண்டும்
மற்றிவை; வீரரின் உள்ளம் தனில்
மண்டிக் கிளர்வன; வாழி! வாழி
சற்றிதில் சோர்பவர் அல்லர்-இதில்
சாவடைதல் ஒன்று வாழ்தல் ஒன்று!
(எங்கள் இளந்தமிழர் வீரர்)

சோழனென் றேஒரு வீரன்-இந்தத்
தொல்புவி காத்தவன் வீரன்-வீரன்!
வாழிய பாண்டிய வீரன்!-அவன்
வாய்மையி லேபெரும் வீரன்-வீரன்!
ஊழிபெ யர்ந்துவந் தாலும் தங்கள்
ஊக்கங் கெடாக்குடி தோன்றினோர்கள்.
வாழ்க! தமிழ்க்குல வீரர்-அந்த
வன்மைத் தமிழ்க்குலம் வாழ்க! வாழ்க!
(எங்கள் இளந்தமிழர் வீரர்)


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 5:40 pm)
பார்வை : 0


மேலே