மனப்பெண்

மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்.
அங்ஙனே
என்னிடத் தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்
காணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,
சதத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,
பொதுநிலை யறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழு நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியுத் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக் கின்ப மோங்கிடச் செய்வே


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(5-Feb-13, 1:16 pm)
பார்வை : 0


மேலே