எனக்கான வெளிச்சம்
பனிமூடி இருக்கும் வனம்
நிறை சூலியாய்க் காடு
பூத்திருக்கும் மலர்கள்
அடர்த்தியான மரம் செடி கொடிகள்
திரியும் விலங்குகள்
வெள்ளி நீர் வீழ்ச்சிகள்
பனியில் குளிர்ந்து
வெயிலில் கருகி
மழையில் நனைந்து
அசையா மோனத்தில்
சூன்யத்தின் நிழல்
தேடித் திரும்புகிறது
சக மனுஷியை!
பாட்டியின் உடலில் உயிர்ப்பு
மெல்லிசாய்..
பேத்தியின் திருமணம்
பார்க்க ஆசைப்பட்டதில்
பத்தாம் வகுப்பு மாணவி
மனைவி ஆனாள்.
முகமற்ற மனிதன் கைப்பிடித்து
ஏழு அடி எடுத்து வைக்கையில்
மாலை மாற்றுகையில்
பக்கத்தில் அமர்கையில்
கருகி உலர்கிறாள்
நெளிந்த பித்தளைப் பாத்திரமாய்ப்
பெண் முகம்...
ஆனந்த வெள்ளத்தில்
ஆவி பிரிய
நூற்று மூணாவது வயதில்
செத்துப் போன
பாட்டிக்காக அழுகிறார்கள்!
முட்டுச் சந்தில்
நிற்கப் போகிறோம்
என்றுணர்ந்தே
உன்னுடன் பயணித்தேன்
என்னை நிறுத்திவிட்டு
நீ மட்டும் திரும்பி நடந்தாய்
உன் காலடித் தடங்களில்
முட்கள் பூத்தன..
முன்னும் பின்னும்
போக வழியில்லாத
தவிப்பில் நான்!