சலோ சென்னை

பொந்தும் உடைப்பும் அந்த சாலை
பிய்ந்த இருக்கையும் துருப்பிடித்த தகரமும்
ஒழுகலும் இல்லா
தாள் தள ,சொகுசு , தொடர் , குளிர் பதன
விரைவு , நகர்ப் பேருந்து

கசரும் குபையும் சாய்க்கடைத் தேங்கலும்
தவணையில் சாகும் கத்திருப்பும்
முற்றல் நோய் மாந்தரும் அற்ற
பொது மருத்துவமனை வளாகம்

மலக்குடல் நீள் புழு மிதப்பும்
உள்ளாடையில் துள்ளி விழும் தெறிப்புழுவும்
வெருட்டாத பொதுக் கழிப்பிடம்

அல்லில் ஆறு பகலில் ஆறுமாய்
பன்னிரு மணிக்கூர் மின் தடை அவல
சாபம் இலாத
நாழிகைக்கும் குறைவான மின் தடை

உயர்கல்விச் சாலை
தமிழின் உயிர் காக்கும்
திரைத் தொழிற் கூடம்
யாவும்
இனிதே
அருளப் பெற
எனதருமைக் கிராமத்து மானுடனே
சலோ சென்னை…

ஆற்றில் வரத்தில்லை
கால்வாயில் கசிவில்லை
குளத்தில் இருப்பில்லை
கிணற்றின் ஊற்றுக்கண் திறப்பில்லை

விவசாயம் நாளும் சுயக்கொலை நடத்தும்
விதைத் தானியம்
இராக் கஞ்சி வெந்து கொண்டிருக்கும்

விளைச்சல் இல்லை
விளைந்தாலும் விலையில்லை
சிறுதொழில் தொடர வாய்ப்பில்லை

விசைத்தறி , குறுதொழில் , பட்டறை
காலால் மிதித்தோ
கையால் சுழற்றியோ
ஓட்டலாம் உடப்பில் தெம்பிருந்தால்
வருவாய் இல்லாமையால் வணிகமும் இல்லை
சாணம் இலாமையால் முன்றில் தெளிப்பும்
இல்லை மாதோ!

பிச்சை புகினும் வயிற்றுத் தீ
அணைக்க
சுவரும் கூரையும் அற்ற
நடைபாதை வாழ

சலோ சென்னை…
தருமமிகு சென்னைக்கு
தமிழ் வளர்க்கும் சென்னைக்கு
அறம் செழிக்கும் சென்னைக்கு

சலோ பாய்!
ஜல்தி சலோ!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:24 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே