இங்கே ஒரு கவிதை - உடலின் கதவு

கடலை வரைந்தவள்
அவளுக்குள்
உயிருள்ள கடலொன்றை வரைந்திருக்கிறாள்.
எதிர்நோக்காப் பொழுதொன்றில் கொந்தளித்து
உறங்கும் நகரத்தின் கரைகளை விழுங்கிவிடுகிறது
கூந்தலின் அலைக்குள்
மீன்கள் குதூகலமாய்க் கொந்தளிக்கின்றன
பவளப்பாறைகளின் மடிப்புகளில்
புனைவுகளில் விளையும் காலம் உறங்குகின்றது
அவளது இதழ் நீலஒளி கீறிய புன்னகையுடன்
இரவினை முத்தமிடுகின்றது
உடலெங்கும் படர்ந்திருக்கிறது
பெளர்ணமியின் ஈரஒளி
அவளின் வனாந்தரத்தில்
சங்குப்பூச்சிகள் மேய்கின்றன
காலத்தின் சிந்தனையேயிலாது
கடல் ஆமைகள் ஊமைப்பெண்களாய்
அழகு சிந்த நோக்குகின்றன
பார்வைக்குள் அடக்கியிருக்கும் பாடல்களை
விடுவிக்க முடியாத ஏக்கம் ததும்ப
அவளது கடலுக்குள் ஏகி
எண்ணிக்கை மீறுகின்றன காலையும் மாலையும்
ஒரு பார்வையில்
கடலையே அவளால் சுருட்டிக்கொள்ள முடியும்
கம்பளத்தைப் போல
ஆனால் நெருப்பின் கங்குவளையத்தினூடாக ஒரு பயணம்
தகிக்கும் சூரியனைத் தலையில் சுமத்தைப் போல
ஓய்தலின்றித் தவிக்கிறாள்
அவளுக்குள் ஒரு கடலையல்லவா எழுப்பியிருக்கிறாள்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 5:34 pm)
பார்வை : 0


மேலே