தேன் கூடு

இலட்சம் அறைகளாய் பெருக்கம் பெற்றிருக்கிற
தேனீக்களின் கூட்டில் இனிமையின் ரசம் பேருருக் கொண்டு
அடையாய்க் கூடாய் அந்தரக் கிளையில் தொங்குகிறது
கீழே அதை மாந்து நிற்பவனின் நெஞ்சில்
எட்டாத உயரத்தின் ஓர் ஆசையாய் ஊசலாடுகிறது
இத்தேன் கூட்டைச் சுமந்து அலையும்
என் பேருவகையை ருசிக்க வந்தவனையும்
கூட்டில் ஓர் அறையாக்கி அணைத்துக் கொள்கிறது
அவன் மகரந்தத்தையும் தேனாக்கித் தின்கிறது
அவன் வியர்வையையும் நாநுனியில் இனிப்பாக்கிக் களிக்கிறது
உயிரைக் கோதும் இலட்சம் ஈக்களின் எண்ண மூட்டத்தில்
கூட்டின் அறைகள் பெருகிக் கொண்டே இருக்க
எலும்புகளுக்கு இடையே புகைச்சுருள்களாய்
அவனுக்கான பாடல் கூவலுடன் எழும்புகிறது
உயிரின் இனிய வேதனை சொட்டுச் சொட்டாய்
காலத்தின் பாறைகளில் துளிர்க்கிறது
அதன் அனுபவத்தை கையேந்திப் பருகிட
அருகில் வந்தவனுக்கு கையில் அள்ளித் தருகிறது
ஒவ்வொரு அறையையும் நிமிண்டும் சுவையின் குறுகுறுப்பில்
கசியும் தேனை சேகரமாக்கும் கனவுகளின் பேரீசல்கள்
சுழன்று சுழன்று பறக்கும் நினைவின் பெருவண்டுகள்


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:45 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே