ஆடை

பரந்த நிலவெளியை நீரில் நனைந்த உடையென
வாரிச் சுருட்டி எழுந்த இவ்வுடலின்
நீல வண்ணப்பட்டாடை அவன் பார்வை விரித்த வானம்
எனைத் தன்னிரு கரங்களால் சுழற்றி இழுத்த விசையில்
எம்முடல்கள் நிலமொன்று விரித்து
கொத்துக் கொத்தாய்க் கொன்றைப் பூக்கள் முளைத்தெழும்
பூ உதிர்ந்த வெளியில் காற்று சரசரத்துப் போகும்
உயிரைக் கவர்ந்து தந்த முத்தத்தில்
பாறைகள் மீதாய்ச் சீறியேறி பெருமுழக்கத்துடன் வீழும்
பேரருவி பெருநிலவெளிகளில் பெருக்கெடுத்தோடும்
இடையறா முயக்கங்கள் இடையனின் கிடையோட்டிய
மேய்ச்சல் வெளிகளில் பசும்புற்களைப் பரப்பும்
மழை பெய்த நிலத்தை உழுதுழுது நடந்த
பயிர்க்கால்கள் போல யாக்கையெங்கும் வேரோடிய
ரோமங்கள் அவனைத் தேடித் தேடி அழைக்கும்
நிலவொளி வீசும் வானத்தை
உடையாக்கித் தரும் ஈர அணைப்புகளில்
உடலின் உயிர்ப்பிராணிகள்
கர்ச்சித்தெழும் கானகமாகும் கனவுகள் பெருகும்


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:46 pm)
பார்வை : 0


மேலே