கதம்பம்

உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து தழுவிச் சென்றார்
இரவின் கடும் இருட்டின் கரையிலும்
பொழுதற்ற வேளையிலும்
யார் வந்து தொடுகிறார்
மணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்
உடல் குழைந்து சாகும் வேளை
யாரும் ஏதும் சொல்லிலார்
நரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய
செஞ்சந்தனம் குளிர
யார் வந்து அணைக்கிறார்
காலமென்ற வேதனையைக்
மண்குடமதில் நீராக்கி
கணக்கில்லாமல் சுமக்கும் போது
யார் வந்து கை மாற்றுவார்
கண்ணிலார் காதிலார் மனமிலார்
எண்ணிலார் இம்மண்ணிலே
ஒன்றாகக் குழுமிடவே
யார் வித்தை செய்திட்டார்
உடல் என்ற பூக்குடலை
வாட வாட நிறைக்கவே
யார் விரித்தார் இப்பூவனத்தை
உடலெல்லாம் கதம்ப மணம் வீச
யார் வந்து போகிறார்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:52 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே