தாமரை மலர் நீட்டம்

தடாகத்தில் கண்ணகியின் உடல்
ஒரு செந்தாமரையாகித் தவிக்கக் கண்டாள்
காமத்தின் நீர் மட்டம் உயர உயர
தன் தாமரையின் ஒற்றைக்காலில் நின்ற
தவ வேளையும் உயரக்கண்டாள்
சேற்றின் வேகாத மண்ணில் நின்று தவித்த
தன் தாளாத இலை உடலை
அந்நீரில் விரித்து சூரியன் பரவக் கொடுத்தாள்
சூரியனோ அவளைக் காணாமல் கடக்கிறது
தணலாய்த் தகித்தது உள்ளும் புறமும்
நீர்த்தடாகம் அவளைச் சுற்றிப்
பெருகிக் கொண்டே இருந்தது
தன் இலையுடல் நோவும் கனத்த மலராகத்
தான் இருப்பதை அவள் விரும்பாமலும் இல்லை
சுற்றிப் பறக்கும் தேனீக்களுக்குத் தேன் கொடுக்க
விரியும் தன் முகத்தை முத்தமிட்டு முத்தமிட்டுச்
சிரிக்கின்றன தேனீக்கள்
தடாகம் தரை தங்காமல் கரையெட்டித் தளும்ப,
மலருடன் வாடும் முன் எனைக் கொய்யச் சொல்லுங்கள்
இல்லை, தடாகத்தைக் கடந்து போகும் சூரியனைக்
கண நேரம் என்னில் பரவச்சொல்லுங்கள்
எனக்கூவுகிறாள் விடிகாலைப் பொழுதுகளில்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 6:56 pm)
பார்வை : 0


மேலே