தலை

நிறுவன மரத்தின் மண்டையில் ஏறியமர்ந்து
ஓலைச்சீற்றம் கொண்டவர்கள்
குரலெடுத்துக் கரைந்தபோது
மதிய வெயிலின் விறகுக்கட்டைகள்
கீற்றுகளைச் சுள்ளென்று எரித்துக்கொண்டிருந்தன
மனிதச் சலனங்கள் அழிந்து
வெட்டவெளியெங்கும் கானல்வெளிக்காட்சி
மரத்தின் ஒற்றை ஓலை வீழ்தலையும்
பெரும் விபத்தாய்க் கருதி
அவை அழுது ஓய்ந்த அம்மதியத்தில்
வேறெந்த மரமும் தலை திருப்பவில்லை அத்தோப்பில்
உயரத்தில் இருந்து கரைந்தாலே உசத்தியென்று
பின் வந்து மானுடக் காகங்களும் கரைந்தன
கத்திக் கத்திக் கரைந்தன
தரையிலிருந்து எம்பி எழும்பிக் குதித்து
சொற்கள் வற்றக் கத்தின
மரங்களின் மீது ஏணி சாய்த்து ஏறியமர்ந்த
சம்பவத்தைக் கண்டிராதோர் எல்லோரும்
காகங்களாய் மாறிக் கரைந்தனர்
எச்சில் பண்டங்கள் இறைக்கப்பட்ட வீதிகள் நோக்கிக்
காகங்கள் விரைந்தெழுந்து பறந்த போது
ஓலைகளெல்லாம் அடர்ந்து வீழ்ந்து
மரத்தின் மண்டை தரையில் உருண்டது
முண்டமாய் மெய்யுருவம் கொண்டு
கொளுத்தும் வெயிலில்
வானோக்கி வீணே நின்றது மொட்டை மரம்
ஒற்றையாய்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:05 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே