மானுடம் வாழ்கவம்மா!

அகோ ஐம்பூதங்களே!

எங்கள் வாகனங்கள் நீங்கள்

எங்கள்மேல் நீங்களே சவாரிசெய்யாதீர்கள்

நீங்களெல்லாம் நெகிழ்ந்துகொடுக்க வேண்டாம்

உங்கள் ரகசியம் அகழ்ந்தெடுக்க

மனிதஜாதிக்கு வலிமை கொடுங்கள்


நிலத்தின் முதல்துகளே!

நீரின் முதல்துளியே!

தீயின் முதற்பொறியே!

காற்றின் முதல் அணுவே!

வானின் முதல் வெளியே!

உங்களின் நீட்சியே நாங்கள்


வணங்குகிறோம்


எம்மால் மாசுறாமல் உம்மையும்

உம்மால் உயிர்கெடாமல் எம்மையும்

காத்தருளுங்கள்


பிறர்க்குச் சிந்தக்

கண்ணீர் கொடுங்கள்

எமக்குச் சிந்த

வேர்வை கொடுங்கள்


எங்கள் போகங்கள் பேணுங்கள்


உமிழ்நீரும் சுக்கிலமும்

வற்றாமற்காக்கும் வரமருளுங்கள்


சக்தியுள்ள வயதிலும்

சந்தர்ப்பமுள்ள பொழுதிலும்

ஒழுக்கம்பழுத்த உள்ளம் கொடுங்கள்

தாங்க முடிந்த தோல்வி கொடுங்கள்

கர்வம் பூசாத வெற்றி கொடுங்கள்


கவரல் ஒழிந்த செல்வம் கொடுங்கள்

பொறாமையுறாத புகழ் கொடுங்கள்


கவிதைகளும் மேகங்களும்

அழைத்தால் பொழியுமாறு அருள்பாலியுங்கள்


மானுடத்தின் £தங்களைக்

காற்றுக்கு எழுத்தறிவித்துக்

கற்றுக் கொடுங்கள்


மேகத்தின் இடியோ

செய்யாத பழியோ

தலையில் விழாமல் தடுத்தாட்கொள்ளுங்கள்


தாமரையிலைத் திவலைகள் நாங்கள்

கடுகி வீசாவண்ணம்

காற்றை கட்டிவையுங்கள்


எல்லாரும் சிரிக்கின்ற வாழ்வுகொடுங்கள்

எதிரியும் அழுகின்ற மரணம் கொடுங்கள்


எங்கள் வாழ்வின் கோப்பையை

ஊற்றும்போதே உடைத்துவிடாதீர்கள்

நிறைந்தபிறகு வழியவிடுங்கள்.


கவிஞர் : வைரமுத்து(11-Apr-11, 1:05 pm)
பார்வை : 120


மேலே