தமிழ் கவிஞர்கள்
>>
வ. ஐ. ச. ஜெயபாலன்
>>
இளவேனிலும் உழவனும்
இளவேனிலும் உழவனும்
காட்டை வகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
வீடுதிரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில்
கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
தொட்டதெல்லாம் பொன்னாக
தேவதையின் வரம்பெற்ற
மாலைவெய்யில்
மஞ்சட்பொன் சரிகையிட்ட
நிலபாவாடை
நீளவிரிக்கிறது:
இதயத்தைக் கொள்ளையிட
வண்ணத்துப் பூச்சிகள்
வழிமறிக்கும்
காட்டுமல்லிகைகள்
காற்றையே தூதனப்பி
கண்சிமிட்டும்.
அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும் எருதுகளோ,
தரிக்கா.
ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்.