பதில்

தெருக்களில் திரிந்தேன்.
வானக்
காட்டிலே மாலைப்போதின்
குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன்.

நான்நின்றால்
தானும் நின்று
நான் சென்றால்
தானும் மேலே
தொடர்கிற நிலவைப் பார்த்தேன்.

வானத்தில் வர்ணக்கோலம்
விசிறிடத்
திகைத்த மீனைப்
போய்க் கொத்தும் பறவை போல
ஒரு கேள்வி மனசுக்குள்ளே.

என்னடா செய்வாய் தம்பி
பெரியவன் ஆனபின்பு
என்றொரு கேள்வி கேட்டார்
இளமையில் சிலபே ரென்னை,

அன்று நான் அதற்குச் சொன்ன
பதிலொன்றும் நினைவில் இல்லை
இன்று நான் என்ன சொல்வேன்?
அதைக் கேட்க அவர்கள் இல்லை.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:26 pm)
பார்வை : 0


மேலே