எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன்
என்றான் ஒருவன்
இல்லை என்றேன் அவன் சொன்னான்

என்னை இன்று உண்பித்தால்
உனக்குச் சில நாள் உழைப்பேன்

ஒன்றும் வேண்டாம் போ என்றேன்

இன்னும் சொன்னான். ‘என்னைப் பார்
கண்டதுண்டா நீ முன்பு
என்னைப் போல் சப்பட்டை
யான மனிதன்’

நானும் பார்த்தேன் அதுசரி தான்

‘எனக்குக் கொஞ்சம் சோற்றைப்போடு
பலவிதமாகப் பயன் படுவேன்
கதவில்லாத உன் குளியலறைக்கு
மறைப்பு போல நான் இருப்பேன்
வேண்டுமென்றால் என்னைக் கிடத்திப்
பொருள்கள் உலர்த்தலாம் நடுப்பகலில்.
அதுவும் இல்லை பெருங்காற்று
வீசும் மாலைக் காலங்களில்
உடம்பின் நடுவில் பொத்தலிட்டுக்
காற்றாடியாகச் சுற்றலாம் நீ’
என்றான் அந்தச் சப்பட்டை.
உள்ளே சென்றேன். வரும்வரைக்கும்
இருக்கச் சொன்னேன். நொடிப் பொழுதில்
சோற்றைக் கொணர்ந்தேன் ஒரு கையில்
மாலைக் காற்றின் நினைப்போடு.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:27 pm)
பார்வை : 0


மேலே