ஓட்டை ரூவா

நடத்துநர் பக்கம் நீட்டிய பொழுதே
நெஞ்சம் சற்று தடதடத்தது.
இடமும் வலமும் தலையை அசைத்துத்
திருப்பித் தந்தார் இரண்டு ரூவாயை.

வாங்கிக் கொண்டேன் வீதிப் பக்கம்
விரித்துப் பார்த்தேன். நடுவில் ஓட்டை…

ஓட்டை வழியாய்ப் பார்த்தேன். கட்டிடங்கள்
ஓடிச் சென்றன விரைவாய்.
அக்குளைக் காட்டிப் பரத நாட்டியம்
ஆடும் ஒருவனின் வண்ணச் சித்திரம்
இசைக் கேடான இடத்தில் மசியால்
தடவப் பட்ட ஒருத்தியின் படமும்
தலைவரின் படங்கள் கோஷங்கள் சென்றன.

ரூவாய்த் தாளை மடித்துப் பைக்குள்
வருத்தத்தோடு வைத்துக் கொண்டேன்
சட்டைப் பையின் அடியில் சூடாய்
இரத்தம் கசிவதாய் நினைப்புத் தோன்ற
சட்டைக்குள்ளே பார்த்தேன். செல்லாத
தாளை எதற்குப் பாதுகாப்பானேன் என்று
ஓட்டை விழுந்த ரூவாய்த் தாளை
வெளியில் எடுத்து வீசி எறிந்தேன். ஆ.

உந்து நின்றது அனைவரும் வெளியில்
விரைவாய் ஓடித் தாளைத் தேடினர்
எண்ணற்ற ரூவாய்த் தாள்கள் எங்கும்
பறந்ததாய்க் கூறிப் பிடிக்கத் தொடங்கினர்.
மக்கள் கூட்டம் பெருகப் பெருக
நானோ இருக்கையில் விழித்திருந்தேன்.

இவன்தான் அத்தனை தாள்களை எறிந்தான் என்று
பலபேர் என்னிடம் தேடத் தொடங்கினர்.

ஒருதாள் அதுவும் நடுவில் ஓட்டை
விழுந்த தாள் என்றால் ஒருவரும் அதனை
ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.

போலீஸ் வந்தது கூட்டம் கலைந்தது.
உனக்குத் தாள்கள் எங்கே கிடைத்தன?
போலீஸ் கேட்டதும் உள்ளதைச் சொன்னேன்.

இருந்தவர் கூடி நடுவில் ஓட்டை
விழுந்த ரூவாய் தாளைத் தேடினர்.
கிடைத்தது. பனைகள் இரண்டுக் கிடையில்
காட்டுச் சிலந்தியின் வெள்ளைக் குடைமேல்

திரும்பத் தந்தார்: ‘வெளியில் எறிந்தால்
எண்ணணும் கம்பி இனிமேல்’ என்றார்.
வாங்கிக் கொண்டு மடியில் வைத்தேன்
வயிற்றுக் கடியில் கனமாய் அறிந்தேன்
வீதியில் எறிய பயந்து கொண்டு
புத்தகத்தின் இடையில் வைத்தேன்.

ஓட்டை விழுந்த ரூவாய்த் தாளது
படிக்கப் படாத பக்கத்தில்
ஒருவாறாக இருந்தது பொருந்தி.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:35 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே