நட்டு

வட்டச் சந்திலும் சதுரச் சந்திலும்
மூன்றுநாட் புழுதி அடைந்திருக்கும்
இரும்பு நட்டொன்று எதிரில் கிடந்தது
எங்கும் இனிமேல் பொருந்தாத நட்டு
என்றாலும் பாரம் அதற்கொன்று உண்டு
எடுத்துக் கொண்டேன் உள்ளங்கையில்
உருட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்
கிண்ணத்து நீரில் மூழ்க வைத்தேன்
சாலிக்ராம பூசை செய்வதாய்
அம்மா என்னைப் போற்றத் தொடங்கினாள்
இனிமேல் வீட்டில் சுபிட்சம் என்றாள்
மனைவி பார்த்து கெக்கலித்தாள்
பிள்ளைகள் அதனை ஆசை தீரதர
தெருவில் பந்தாடிக் களித்தார்கள்
அதற்கு பின்பு நட்டு
வலைஞன் வலையில் ஆமைக் குட்டி போல்
என்றும் எனது பார்வைக் கெதிரே.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே