எழுச்சி

தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:30 pm)
பார்வை : 38


பிரபல கவிஞர்கள்

மேலே