தோழா!

என்னைப் போலொரு மானிடன் என்னை
எப்படித் தாழ்த்தலாம் தோழா? - அவன்
அன்னை போலவே என்னையும் அன்னை
ஆக்கினள் நானென்ன கீழா?

ஆணை செலுத்தவும் ஆளவும் இங்கே
ஆவி அவனெடுத்தானா? - பிச்சைப்
பானை ஏந்திய கையனாய் இந்தப்
பாவி பிறந்து வந்தேனா?

காற்று வானிலே சிட்டுக்கள் கண்டேன்....
களிப்பினில் என்னை மறந்தேன் - இன்பம்
ஏற்று மறுபொழு தென்கரம் பார்த்தேன்....
இருகை விலங்கோ டிருந்தேன்!

அஞ்சி நடுங்கியும் நெஞ்சம் பதைத்தும்
ஆயுள் கழிந்தது தோழா! - உயிர்
கொஞ்சம் இருந்தது.... கூறடா இந்தக்
கொடுமைக்கும் பேரென்ன ஊழா?

என்ன தமிழனோ? ஏன் பிறந்தேனோ?
என்னடா அடிமையின் வாழ்வு! - சீச்சீ
இன்னோர் மனிதனுக் கூழியஞ் செய்தேன்!
இருப்பதிலும் நன்று சாவு!


கவிஞர் : காசி ஆனந்தன்(7-May-11, 6:33 pm)
பார்வை : 28


பிரபல கவிஞர்கள்

மேலே