மெசியாவின் காயங்கள் - சுவடு

பசுமை படர்ந்து விரிந்த
உன் சிந்தை வெளியில்
மந்தையெனக் கலைந்து முன்சென்ற
கனவுகளை மேய்த்தபடி தொலைந்து போனாய்
புதிர்கள் புதர்களாய் அடர்ந்தவுடன்
மூடிவைத்த சுவடுகளை
ஒவ்வொன்றாய் புதையலெனக் கண்டெடுத்து
பின்தொடர்ந்து வந்து சேர்ந்தேன்
இம்மரத்தடியில்.
என்னை நோக்கி சத்தமின்றித் திறக்கின்றன
பசியின் கதவுகள்.
நீ செரிக்கப்பட்டிருக்கலாமோ
என ஐயம் கொள்கிறேன்
மிகத் தாமதமாய்.
சுள்ளிகளைப் பிரித்தெடுக்க அறியாத பறவைகள்
பழையகூடுகளை அப்படியே விட்டு
வெகுதூரம் சென்றிருக்கின்றன
காற்றிலாடும் மரக்கிளை
கைகளை வீசி ஊமை மொழியில்
உணர்த்துகிறது புதுப் புது ரகசியங்களை
உச்சிக் கிளையின் நுனிக்காம்பில்
இலைமறை காயாக
விளைந்துகொண்டிருக்கிறது
தேவதை எனப்பட்டவளின்
ஒளித்து வைக்கப்பட்ட
ஒற்றை முலை.


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 8:58 am)
பார்வை : 74


மேலே