லாஜ்பத்ராய் துதி

விண்ணகத்தே யிரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைத்து வந்து
கண்ணகத்தே யொளிதருதல் காண்கிலமோ?
நின்னையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலா மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே, லாஜபதி, யிடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரோ?

ஒருமனிதன் றனைப்பற்றிப் பலநாடு
கடத்தியவற் கூறு செய்தல்
அருமையிலை; எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும் அந்த மேலான்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனித ரெண்ணற்றார் இவரையெலாம்
ஒட்டியெவர் வாழ்வ திங்கே?

பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பா லிரணியன்சேய்
செய்ததினா லவனுக் குற்ற
கோரங்கள் சொலத்தகுமோ? பாரதநாட்
டிற்பத்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதல் வியத்தற் கொன்றோ?


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 12:45 pm)
பார்வை : 454


மேலே