நாட்டு வணக்கம்

எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே - அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ- இதை
(பல்லவி) வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு
ளீந்தது மிந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிந்நாடே - அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்தது மிந்நாடே - தங்கள்
பொன்னுட லின்புற நீர்விளை யாடியில்
போந்தது மிந்நாடே - இதை
(பல்லவி) வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

மங்கைய ராயவர் இல்லற நன்கு
வளர்த்தது மிந்நாடே - அவர்
தங்க மதலைக ளீன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்தது மிந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்தது மிந்நாடே - இதை
(பல்லவி) வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 12:53 pm)
பார்வை : 349


பிரபல கவிஞர்கள்

மேலே