பகைவனுக் கருள்வாய்

பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்

புகைநடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான். (பகைவனுக்)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ - நன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடிவள ராதோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைவாமோ? - நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ - நன்னெஞ்சே (பகைவனுக்)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழி வானென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலுவந் தானுமவன் - நன்னெஞ்சே
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ண னன்றோ? - நன்னெஞ்சே (பகைவனுக்)

தின்ன வரும்புலி தன்னையு மன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினன்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே (பகைவனுக்)


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 12:57 pm)
பார்வை : 185


பிரபல கவிஞர்கள்

மேலே