கவிதைக் கலை

போலிக் குருமார்கள் :
குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியிருக்கப் போனார்கள்!

போலிப் பக்தர்கள்:
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன் நண்டு வகைகளே அதிகம்

கொள்கைவேறு குணம்வேறு:
ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்

சாவில் கிடைக்கும் வாழ்வு:
புகை பிடித்தால் இறப்பாய்
மது குடித்தால் இறப்பாய்
இரண்டும் விற்றால் வாழ்வில் சிறப்பாய் !

‘பாசமு’ம் ‘நேசமு’ம்:
துபாயில் அதிகமா வெய்யில் !
கேள்வி கேட்டோர் கவனம் எல்லாம்
அவன் இறக்கிவைத்த பையில் !

அலைகளின் அழுகை:
அத்தனை மீன்கள் வலைகளில்
அடுத்தநாள் கடலிலே
அத்தனை அழுகை அலைகளில் !

குழந்தையும் கவிஞனும்:
குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்
உள்ள பொம்மை அத்தனையும் குழந்தை
கைக்குப் போகத் துடிக்கும் !

மழலைக்கா இறுதி யாத்திரை?
பழகிய பொம்மைக்கும் தூக்கம் இல்ல
கேட்கிறது தூக்க மாத்திரை !


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(2-Nov-11, 2:52 pm)
பார்வை : 248


மேலே