என்னை அழைக்கிறது அந்த அடிவானம்

என்னை அழைக்கிறது அந்த அடிவானம்
சலனமற்ற தடாகத்தில்
நீரின் மொக்குகள் போல்
குமிழிகள் பூத்துக் குலுங்குவதைக் கவனித்தேன்
குமிழிகளின் மலர்ச்சி
பின் அவற்றின் மறைவு
இல்லாததற்கு இருப்புத் தருவது
இருப்புத் தந்தபின் மறுப்புத் தருவது
காய்ந்த சருகு சலசலக்கும்
புகைந்தெரியும்
பச்சை இலை காய்ந்து உதிரும்
முன்னகர்த்தி என்ன வீசும் இலைகடல்
அலை என்பது காற்றின் வடிவம்
என் தாய் போல் காற்று
அழைத்துச் செல்லும் அது
ஒற்றையடிப் பாதைகளில் நகரும் காற்றை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை

அங்கொரு உயிர்
அல்லது உயிரின் நிழல்
(அந்தக்) குழந்தையின் காலோசை(நம்மை)
அழைக்கிறது
காலடி ஓசை
அல்லது காலடி ஓசையின் நிழல்
அந்த இருளில் குளிர் ஊடுருவி நின்றது
இருளும் குளிரும்
இருளிலிருந்து இழை எடுத்து
சவுக்குகளிலிருந்து மலர் தொடுத்து
அந்த உலகின் அற்புதங்கள்
யாராலும் நிகழ்த்திக் காட்ட முடியாதது
அந்த உலகின் வர்ணங்கள்
வானத்தின் விற்கள் அறிய முடியாதவை.

இயற்கையின் இமைகள்
துடிக்கின்றன
இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன்
என்னை அழைக்கிறது அந்த அடிவானம்
இப்போது என் கைக்கிளி புள்ளியாய் அடிவானத்தில்.


கவிஞர் : சுந்தர ராமசாமி(2-Nov-11, 6:02 pm)
பார்வை : 93


மேலே