துரியோதனன் சபை

கன்னங் கரியது வாய்-அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியது வாய்-நல்ல
சுவைதரும் நீருடை யமுனையெ னும்
வன்னத் திருநதி யின்-பொன்
மருங்கிடைத் திகழ்ந்த அம் மணிநக ரில்,
மன்னவர் தங்கோ மான்-புகழ்
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்.

துரியோ தனப்பெய ரான்,-நெஞ்சத்
துணிவுடையான்,முடி பணிவறி யான்
'கரியோ ராயிரத் தின்-வலி
காட்டிடு வான்'என்றக் கவிஞர்பி ரான்
பெரியோன் வேத முனி-அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனி னும்-பகைத்
குரியோர் தமக்குவெந் தீயனை யான்,

தந்தைசொல் நெறிப்படி யே-இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்.
மந்திர முணர்பெரி யோர்-பலர்
வாய்த் திருந் தார்அவன் சபைதனி லே.
அந்தமில் புகழுடை யான்-அந்த
ஆரிய வீட்டுமன் அறம்அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர்-பழ
மறைக்குல மறவர்கள் இருவரொ டே.

மெய்ந்நெறி யுணர்விது ரன்-இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கிநின் றார்
பொய்ந்நெறித் தம்பிய ரும்-அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந் தார்;
மைந்நெறி வான்கொடை யான்-உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்.
உய்ந்நெறி யறியா தான்-இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(2-Nov-11, 7:09 pm)
பார்வை : 28


பிரபல கவிஞர்கள்

மேலே