ஒபாமா உனக்கு ஒப்பாகுமா

தமிழ் வணக்கம்,
தமிழினத் தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்?
வைப்பேன் என் தலைவனுக்கு
மட்டும் ஒரு வணக்கம்.
எவரேனும் எண்ணுவரோ
தலைவன் வேறாக
தமிழ் வேறாக ?
தலைவரல்லவா இருக்கிறார்
தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே !
உன் வருகை
கண்டதும் தூக்குவேன்
என் இருகை.
உயரிய தலைவா
உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான்
என் வாய்க்கும்
கவிதை வாய்க்கும்.
என் பாட்டுக்கு
நீதான் பிள்ளையார் சுழி !
உன்னை முன் வைக்காமல்
என்ன எழுதினாலும்
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி !
அருமை தலைவா !
ஆண்டு 2007-ல்
எமனிடம் இருந்து நீ
என்னை மீட்டாய் !
அதற்கு முன்
ஆண்டு 2006-ல் – ஓர்
‘உமனிடம்’ இருந்து
தமிழ் மண்ணை மீட்டாய் !

தேர்தலுக்கு தேர்தல்
5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று
அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய
அஞ்சுக செல்வா !
தேர்தல் வரலாற்றில் – உன்னை
வெகுவாக விமர்சனம் செய்ய
டில்லியில் ஒரு கோபால்சாமி
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ
இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய
கோபாலபுரத்து சாமி !
எனவேதான்
கும்மாளமிட்டு – உன்னை
கொண்டாடுகிறது
இந்த பூமி !
அய்யா !
50 ஆண்டு காலம் – உன்
சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை !

நாவில் தமிழ் ஏந்தி – நீ
நற்றமிழ் இட்ட சபை !
முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை !
குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை !
இனியும் குனியாது
வெற்றியை குவிக்கும்
என்பதும் உன் தலை.
சாதாரணமாய் இருந்து
சரித்திரம் படைத்தாய்.
அய்யா !
அந்த வகையில் நீ ஒரு ஒபாமா !
சரித்திரம் படைத்த பின்பும்
சாதாரணமாக இருக்கிறாய்
அந்த வகையில் உனக்கு
ஒபாமா ஒப்பாகுமா?
உன்னை விட்டு
வலது போனால் என்ன ?
இடது போனால் என்ன ?
மேலே விழுந்த நரி
பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது
நடு நிலைமை
நடுநிலைமை தான்
நல்ல தலைமை !
கலைஞர்கோனே !
கருப்பு கண்ணாடி அணிந்த
கவி வெண்பாவே !
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால்
உன் பின்னே
நகர்கிறது நகர் !
நிஜம் சொன்னால்
ரஜினியை விட
நீயொரு வசீகரமான ‘பிகர்’ !

நாவினிக்க நாவினிக்க
உன்னை பாடியே
என் உடம்பில்
ஏறிப்போனது சுகர் !
நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !
நம்மொழி செம்மொழி
அதனை அங்கீகரிக்காது
நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய்
உடனே குனிந்தது
அதன் சிரசு !

அதுபோல்
தமிழனின் அடையாளங்களை
வட்டியும் முதலும் சேர்த்து
வள்ளலே நீதான் மீட்டாய் !
தரை மீனை திரும்ப
தண்ணீரில் போட்டாய் !
அதனால் தான் அய்யா – உன்னை
அவருக்கு நிகர் அவர் – தமிழனை
துன்பம் தீண்டாது மீட்கும்
தடுப்புச் சுவர் !
மையம் ஏற்கும் வண்ணம்
உன்னிடம் உள்ளது பவர் !
அத்தகு பவர் – உன்போல்
படைத்தவர் எவர் ?
அமைச்சர் பெருந்தகை
ஆற்காட்டாரிடம் உள்ள பவரால்
வீட்டு விளக்கு எரியும்
நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா
உன்னிடம் உள்ள பவரால் தான்
நாட்டு விளக்கு எரியும் – நற்றமிழ்
பாட்டு விளக்கு எரியும்.
குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள்
ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது !
அடுப்பு விளக்கு
அன்பு விளக்கு
அமைதி விளக்கு
அறிவு விளக்கு என
பல்விளக்கை இன்று
உன்னை பணித்து வாழ்த்தி
சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா
உனக்கு தருவேன்
கேள் ஒரு வெண்பா !


கவிஞர் : கவிஞர் வாலி(4-Jan-12, 9:57 am)
பார்வை : 112


பிரபல கவிஞர்கள்

மேலே