அச்சமில்லை (பண்டாரப் பாட்டு)

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைச் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Mar-11, 7:02 pm)
பார்வை : 1126


மேலே