அறம் செய்க

தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும் மக்கள் கூட்டமும்,
வாழுமாறு - அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலர்கள் 'உலகப் பொன்னி லக்கியம்'
ஆக்கினார்! மறவரோ, அறிவு - அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந்தோளால் தொடங்குக 'பணியை'!

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக 'அறம் இன்பம்' என்றே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:18 pm)
பார்வை : 26


மேலே