காதல்பசி

நேற்று வந்தேன் இல்லையே -- நான்!
நீ இல்லையே!
காற்றுவந்த சோலையில் எனைக்
கண்டுசிரித்த முல்லையே! (நேற்று)
ஆற்றங்கரையின் ஓரம் -- மாலை
ஆறுமணி நேரம் -- நீ
வீற்றிருப்பாய் என நினைத்தேன்
விளைத்தாய் நெஞ்சில் ஆரவாரம்!

புல்லாங்குழல் சொல்லை -- உன்
புருவமான வில்லை -- முத்துப்
பல்லை, இதழை, முகத்தைத் தேடிப்
பார்த்தேன் இல்லை -- பட்டேன் தொல்லை.

இன்பமான நிலவு -- நீ
என்னைப்பற்றி உலவு -- நான்
துன்பப்பட்ட நேரமெல்லாம்
தொலைந்தது பார்; கொஞ்சிக் குலவு!
நேற்றுவந்தேன் இல்லையே -- நீ
இல்லையே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 6:55 pm)
பார்வை : 34


மேலே