காதல் தீயின் களிப்பு

அன்புடையாளே
அருமைத்தோழி ;
என்னைப்பற்றி
நினைக்காதே!
உன்றன் கருத்தை
ஒப்பும் படி நீ
அறிவுரை ஏதும்
உரைக்காதே?
உயிரும் உணர்வும்
உள்ளத்துள்ளே
ஓங்கும் புயலாய்
அடிக்கிறது!
உயரும் காதல்
உணர்ச்சி நெருப்பாய்
ஓன்றையும் காணா
துயர்கிறது!

சாதி, குலம், மதம்,
சீலம், மானம்
சார்ந்த காதல தீயினிலே
வேதியனைப்போல்
விரகிட்டல்ல
காதல் தீயில்
எரித்திட்டேன்!
காதலை அறியாக்
கயவர் கூட்டம்
கண்டதையெல்லாம்
கத்தட்டும்!
மோதும் அலையில்
உப்பைக் கொட்டும்
மூடர்கள் ஏதும்
செய்யட்டும்!

இளமை என்னும்
அருவிப் பெண் நான்
இளைஞன் என்னும்
பேராற்றில்
உளங்கொண்டாடி
என்னை இழந்தேன்!
ஊராராம் நாய்
குலைக்கட்டும்.
உண்ணும் போதும்
உயிர்க்கும் போதும்
காதலை யன்றி
ஒன்றறியேன்!
பண்ணும் தொழிலில்
பாட்டிக் காதல்
மன்னவனன்றி
வேறு அறியேன்.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 7:06 pm)
பார்வை : 87


பிரபல கவிஞர்கள்

மேலே