அவள்மேல் காதல்

உண்டாலே தேன் மலரின் தேன் -- இவள்
கண்டாலே தித்திக்கும் தேன்!
வண்டால் கெடாத தேன்!
வையம் காணாத தேன்!
மொண்டால்கு றையாத தேன்! -- நானே
மொய்த்தேன் பேராசை வைத்தேன்!

கண்ணொவ் வொன்றும் பூவே
கை ஒவ்வொன்றும் பூவே
பொன்னுடம் பெல்லாம் பூவே -- நான்
பெறுவேன் அப்பூங் காவே!
ஆளுக்குக் குளிர் சோலை
தோளுக்குப்பூமாலை
நாளும் என் மனம் வெம்பாலை -- அதன்
நடுவில் அவள் கரும்பாலை?

கோவைஇதழ் சுவையூட்டும்
கொஞ்சுமொழி அமுதூட்டும்
பாவிவைத்தேன் இதில் நாட்டம் -- காதற்
பசிக்கிவள் பழத்தோட்டம்.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 7:06 pm)
பார்வை : 75


மேலே