பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்.

மந்திர வாதி என்பார்-சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங் கள்-இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே-ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசிய லை-இவர்
அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார்

சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்;
எப்போதும் கைகட்டு வார்-இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார்

நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினை கள்?-ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
ஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால்
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார்.

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார்.

நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்.
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரிதவித் தேஉயிர் துடிதுடித் தே
துஞ்சி மடிக்கின் றாரே-இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே

எண்ணிலா நோயுடை யார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார்
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்;
நண்ணிய பெருங்கலை கள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின் ற
புண்ணிய நாட்டினி லே-இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார்


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 10:00 am)
பார்வை : 21


மேலே